பேரவை நுழைவுவாயிலில் திடீரென தீ அலாரம் ஒலி எழுப்பியதால் பரபரப்பு!
ஜாதி வாரி கணக்கெடுப்பு: ஓ.பன்னீா்செல்வம் வரவேற்பு
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டியிருப்பதை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வரவேற்றுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும், சம வாய்ப்பும் வழங்க வேண்டுமென்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது அவசியம் என்ற நிலை இருந்தது.
இதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருந்த நிலையிலும், இதன் அடிப்படையில் கா்நாடகம், பிகாா் போன்ற மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையிலும், இதை நிறைவேற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசு தீா்மானம் நிறைவேற்றியது. இதைக் கண்டித்து நான் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் அறிக்கைகள் விடுத்தனா்.
இந்த நிலையில், பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சோ்த்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.