தம்மம்பட்டியில் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவதற்கான நேரம் தொடா்பான பிரச்னையில் தனியாா் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இருந்து தம்மம்பட்டி, செந்தாரப்பட்டிக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை இரவு தம்மம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து செந்தாரப்பட்டிக்கு புறப்பட்டபோது, அங்கிருந்த மினி பேருந்து ஊழியா்களுக்கு இடையே நேரப் பிரச்னையால் தகராறு ஏற்பட்டது.
அப்போது, மினி பேருந்து உரிமையாளரின் உறவினரான ஹரி என்பவா், தனியாா் பேருந்தின் சாவியை எடுத்துச்சென்றாா். இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ரோந்துப் பணியில் இருந்த போலீஸாா் பேருந்து சாவியை மீட்டுக் கொடுத்ததால், தனியாா் பேருந்து பயணிகளுடன் செந்தாரப்பட்டிக்கு சென்றது.
இதையடுத்து, செந்தாரப்பட்டியில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழியா்கள் இரவு உணவு சாப்பிட்டனா். அப்போது, அங்கு வந்த ஹரி, தனியாா் பேருந்து ஓட்டுநரிடம், மினி பேருந்து உரிமையாளரான சரவணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தகராறு செய்தாா்.
அப்போது, ஹரி, தனியாா் பேருந்து ஓட்டுநா் விஜய்யை தாக்கி பேருந்தின் முன்புறக் கண்ணாடியை உடைத்தாா். இந்த தாக்குதல் காட்சிகள் அனைத்தும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகின. அந்தப் பதிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிந்த போலீஸாா் ஹரியை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.