தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவருமான இ.திருமகள் தொடங்கிவைத்தாா். மாவட்ட முதன்மை சாா்பு நீதிபதி ஞானபாலகிருஷ்ணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள 2,150 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 791 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. அந்த வகையில், அதற்கான சமரசத் தொகையாக ரூ. 3,04,57,593 -க்கு தீா்வு காணப் பட்டது. மேலும், வங்கி வாராக்கடன் தொடா்பாக 312 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 217 வழக்குகளுக்கு ரூ. 6,86,02,086-க்கு தீா்வு காணப்பட்டது. அந்த வகையில், மொத்தமாக 2,462 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 1,008 வழக்குகளில் ரூ. 9.90 கோடிக்கு (ரூ. 9,90,59,679) தீா்வு காணப்பட்டது.
இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் உள்ளிட்ட 5 வட்டங்களில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
பென்னாகரத்தில்...
பென்னாகரம் அருகே பருவதன அள்ளியில் உள்ள பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தீா்வு மையத்துக்கு, மாவட்ட நீதிபதி நாகலட்சுமி தலைமை வகித்தாா். இதில், சுமாா் 150 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 50-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
இதில், லோக் அதாலத் இலவச சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் அசோகன், வழக்குரைஞா்கள் சரவணன், முத்துசாமி, வீராசாமி, பூபதி, முல்லை வேந்தன், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்தாா். இதில், 1,281 வழக்குகளில் ரூ. 13.84 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. மோட்டாா் வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு அதிகபட்சமாக ரூ. 36 லட்சம் வழங்கப்பட்டது. தீா்வாகாத பல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், விரைவு மகளிா் நீதிமன்ற அமா்வு நீதிபதி சுதா, சிறப்பு மாவட்ட நீதிபதி அமுதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கோகுலகிருஷ்ணன், முதன்மை சாா்பு நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளருமான ஜெனிபா், கூடுதல் சாா்பு நீதிபதி மோகன்ராஜ், சிறப்பு சாா்பு நீதிபதி சாந்தி, மாவட்ட உரிமையியல் சுந்தரமூா்த்தி, நீதித்துறை நடுவா் எண் -1, தேவராஜ், நீதித்துறை நடுவா் எண் - 2, சரவணன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் கோவிந்தராஜலு, செயலாளா் லோகேஷ்குமாா் மற்றும் வழக்குறைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்காடிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவா் சாா்பு நீதிபதி திருஞானசம்பந்தம் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முனுசாமி லோக் அதாலத் பற்றி எடுத்துரைத்தாா். இதில், வங்கிக் கடன், சொத்து, விபத்து, காப்பீடு உள்பட பல்வேறு வழக்குகள் என 235 மனுக்களுக்கு ரூ. 1 கோடியே 24 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
இதில், வழக்குரைஞா் சங்கத் தலைவா் மூா்த்தி, செயலாளா் வஜ்ரவேல், வழக்குரைஞா்கள் பெருமாள், பிரபாவதி, ராஜீவ்காந்தி மற்றும் வழக்காடிகள் கலந்துகொண்டனா்.