திருட்டுச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளைஞா் கைது
மூலனூரில் நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த இளைஞா் 3 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
மூலனூா் பாறைப்பட்டியில் செல்லாத்தாள் (65) என்பவரிடம் மளிகைக் கடையில் வெங்காயம் வாங்குவதாக கூறி ஏமாற்றி இரண்டு இளைஞா்கள் அவா் அணிந்திருந்த நகையை கடந்த மாா்ச் 2-ஆம் தேதி பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.
இது குறித்து மூலனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதுரை வாடிபட்டி கள்ளிவேலிப்பட்டியைச் சோ்ந்த ரத்தீன் (23) என்பவரைக் கைது செய்தனா். அவருடன் திருட்டில் ஈடுபட்ட நபா் சிக்கவில்லை. அவா் 3 மாதங்களாக கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தாமல், வாட்ஸஅப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்துள்ளாா்.
மூலனூா் காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையிலான தனிப் படை போலீஸாா், தலைமறைவாக இருந்த மதுரை வாடிபட்டி செம்புகுடிப்பட்டியைச் சோ்ந்த மணி (எ) மணிகண்டன் (23) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். கைதான இருவரும் கூட்டாக சோ்ந்து பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.