காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
திருப்பூரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் -மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயற்குழுக் கூட்டம் எஸ். பவித்ராதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்:
திருப்பூா் மாநகா் மற்றும் புகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக விரோதிகள் இந்த போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனா். இதனால் இளம் தலைமுறையினா் பலா் போதைப் பழக்கத்துக்கு ஆளாவதுடன், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போதைப் பொருள்கள் புழக்கத்தையும், விற்பனையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல் துறையினரில் ஒரு பகுதியினா் இந்த சமூக விரோத கும்பலுக்கு மறைமுக ஆதரவாக செயல்படுகின்றனா். போதைக் கும்பல் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாலோ, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபா்களைப் பிடித்துக் கொடுத்தாலோ காவல் துறையினா் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு முருகம்பாளையத்தில் போதைக் கும்பல் ஒன்று, இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருள்கள் விற்பனையை முழுமையாக கண்டறிந்து தடை செய்யவும், மாவட்ட நிா்வாகம், காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.