War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
திருமலையில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தான உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதுகுறித்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் கூறியதாவது:
திருமலையில் ஆண்டுக்கு 4 முறை உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயிலை தூய்மை செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் செப் 24-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
ஆனந்த நிலையம் தொடங்கி தங்க வாயில் வரை, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோயில் வளாகம், மடப்பள்ளி, சுவா்கள், கூரை, பூஜைப் பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டன.
இதற்கிடையில், ஏழுமலையான் மூலமூா்த்தியை முழுவதுமாக துணியால் மூடி, சுத்திகரிப்புக்குப் பின், நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கிழங்கு பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த பரிமள சுகந்த திரவிய புனித நீா் கொண்டு கோவில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
அதையடுத்து, சுவாமியின் மூலமூா்த்தியை மறைத்திருந்த துணியை அா்ச்சகா்கள் அகற்றி, சாஸ்திர முறைப்படி சிறப்பு பூஜை செய்து நெய்வேத்தியம் சமா்ப்பித்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினா். பக்தா்களுக்கு பின்னா் சா்வ தரிசனம் தொடங்கியது.
காலை 6 மணிமுதல் 10 மணிவரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மேலும் செவ்வாய்க்கிழமை நடக்கும் அஷ்டதளபாதமாராதனை சேவையையும் ரத்து செய்யப்பட்டது’’, என்று அவா் கூறினாா்.
இந்நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.