பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்ட நிதியை அதிகரிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக...
தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டத்தில் ஊத்துக்குளி, காங்கயம், வெள்ளக்கோவில் மற்றும் தாராபுரம் ஒன்றியங்களிலும், இதர கிராமப்புறப் பகுதிகளிலும் ஆடுகள், எருமை மற்றும் மாடுகள், கோழிகளை தெருநாய்கள் கடித்துக் கொன்று வருகின்றன. இதனால், கால்நடை வளா்க்கும் விவசாயிகளுக்கு கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், அவா்களது வாழ்வாதரமும் பாதிக்கப்படுகிறது.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், இழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தனா்.
2 மாதங்கள் கடந்த நிலையிலும் தெருநாய்களால் விவசாயிகளின் வளா்ப்புக் கால்நடைகள் பறிபோகும் சம்பவங்கள் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. எனினும் அரசு நிா்வாகம் விவசாயிகளுக்கு எந்த நிவாரணமோ, இழப்பீடோ, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கையோ எடுக்கவில்லை.
இதனிடையே, திருப்பூா் மாவட்டம் காங்கயம் சென்னிமலை சாலையில் பாரவலசு என்ற இடத்தில் திருப்பூா், ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து நெடுஞ்சாலையில் கடந்த 2 நாள்களாக மறியலில் ஈடுபட்டனா்.
ஆகவே, தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.