நம்முடைய களம் பெரிது - பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! - முதல்வர்
நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற “தமிழ் வார விழா” நிறைவு விழாவில், 5 தமிழறிஞர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களுக்கு நூலுரிமைத் தொகை மற்றும் பல்வேறுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”திராவிட இன எழுச்சி - பொங்கும் தமிழ் உணர்வு - பெண் விடுதலை - சமத்துவம் - சமூகநீதி - தமிழ் இலக்கிய அழகியல் - தமிழர் வாழ்வியல் ஆகியவற்றுக்கு அடையாளம் பாவேந்தர் பாரதிதாசன்!
எங்கும் அவர் கவிதைகள் முழங்கிடக் கண்டு உள்ளம் பொங்குகிறது, பெருமகிழ்ச்சியால்; பேருணர்ச்சியால்! தமிழர் குருதியில் பாவேந்தரின் வரிகள் கலந்தோட வேண்டியது காலத்தின் தேவை!
தமிழ்நாடெங்கும் நடைபெற்ற தமிழ்வாரவிழாவில் பங்கெடுத்த இளைஞர் பட்டாளமே… பாவேந்தரால் பரிசுகள் வென்றீர்; வாழ்த்துகள்! இது போதுமா?
நம்முடைய களம் பெரிது - அதில் நாம் பெறவுள்ள பரிசு அதனினும் பெரிது! தொடர்ந்து கொண்டு செல்லுங்கள் பாவேந்தரின் கருத்துகளை எல்லோரிடமும்!
தங்கத்தமிழ் தந்த அவரது புகழ் ஓங்குக! தமிழர் வெல்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை! நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர்!