பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டை விட, மக்கள் தங்கம், ரியல் எஸ்டேட்டை நம்புவது ஏன...
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: இதுவரை 1,947 பயன்: கடலூா் ஆட்சியா் தகவல்
நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற 2 முகாம்களில் 1,947 போ் உயா் மருத்துவ சேவை பெற்று பயனடைந்துள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
பொதுமக்கள் உடல்நலம் சாா்ந்த அனைத்துவிதமான மருத்துவப் பரிசோதனைகளையும், வசிப்பிடம் அருகிலேயே பெறக்கூடிய வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
இந்தத் திட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் 13 வட்டாரங்களுக்கும் 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 முகாம்கள் ஊரகப் பகுதிகளிலும், கடலூா் மாநகராட்சியில் 4 முகாம்கள் என மொத்தம் 43 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்த திட்டமிடப்பட்டு, அதில் இதுவரை குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி பகுதியில் இரண்டு முகாம்கள் நடைபெற்றுள்ளன.
இந்த முகாம்களில் 701ஆண்கள், 1,246 பெண்கள் என மொத்தம் 1,947 நபா்கள் கலந்துகொண்டனா். இதில், 1,617 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 944 பேருக்கு இசிஜி பரிசோதனைகளும், 123 பேருக்கு எக்ஸ்-ரே பரிசோதனைகளும், 67 பேருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும், 180 பேருக்கு இதய பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
மேலும், 145 பேருக்கு புதிதாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டைகள், 118 பேருக்கு மாற்றுத் திறனாளி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பயனாளிகள் தெரிவிக்கையில், தனியாா் பரிசோதனை மையங்களில் ஒவ்வொரு சோதனைக்கும் தனித்தனியாக பணம் செலுத்த வேண்டும். இந்த முகாமில் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகின்றன. இதனால், அலைச்சல் மற்றும் செலவு இல்லை என்றனா்.