நாயகி பிம்பத்தை உடைக்கக் காத்திருந்தேன்..! மாளவிகா மோகனன் பகிர்ந்த சுவாரசியம்!
நடிகை மாளவிகா மோகனன் நாயகி பிம்பத்தை உடைக்கக் காத்திருந்தபோது தங்கலான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோரின் நடிப்பில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியாகி வசூலில் மட்டுமல்ல, விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக மாளவிகா மோகனன் பிரபாஸுடன் ராஜ் சாப், கார்த்தியுடன் சர்தார் 2 , மோகன் லாலுடன் ஹிருதயபூர்வம் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா மோகனன் கூறியதாவது:
வழக்கமான எனது நாயகி பிம்பத்தை உடைக்க காத்திருந்தேன். பார்வையாளர்கள் எப்போதும் என்னைப் பார்க்கும் விதத்தில் இருந்து மாற்றி பார்க்க விரும்பினேன். எனது போட்டோஷுட் கூட எப்படி இருக்குமென தெரியும். அதை உடைக்கக் காத்திருந்தேன். அதனால், ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்துக்காக காத்திருந்த சமயத்தில்தான் தங்கலான் கிடைத்தது.
நானாக இல்லாமல் இருப்பது எனக்கு கிடைத்தது. அந்தக் கதாபாத்திரத்துக்கு நான் உயிர் கொடுத்தேனா இல்லையா என்பதைவிட நான் அதற்காக அதிகமான மெனக்கெட்டேன். அதில் வரும் முடிக்கூட எனதில்லை. நாயகிகள் திரையில் காண்பிக்கப்படும் வழக்கமான முடி இல்லை. மேக்கப் வித்தியாசமாக இருந்தது.
இந்தக் காரணங்களால் எனக்கு தங்கலான் படத்தில் நடிக்க சுவாரசியமாகவும் அச்சுறுத்தலாகவும் இருந்தது. ஆனால், அதில்தான் நான் எதிர்பார்த்தை செய்ய ஒரு வாய்ப்பு இருப்பதை கவனித்தேன். அதனால் அதைப் பிடித்துக்கொண்டேன் என்றார்.