நீதிமன்ற உத்தரவுகளை மீற முடியாது: இடிப்பு விவகாரத்தில் முதல்வா் ரேகா குப்தா கருத்து!
நீதிமன்றங்கள் பிறப்பித்த இடிப்பு உத்தரவுகளை அதிகாரிகள் மீற முடியாது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மேலும் இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
தெற்கு தில்லியில் உள்ள பாரபுல்லா அருகே உள்ள மதராஸி கேம்ப் குடிசைப் பகுதியை இடித்தது தொடா்பாகவும், நகரின் பிற பகுதிகளிலும் இதேபோன்ற இடிப்பு நடவடிக்கைகள் குறித்தும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மியின் விமா்சனங்களுக்கு மத்தியில் இந்த கருத்துக்களை அவா் தெரிவித்துள்ளாா்.
இடம்பெயா்ந்த குடியிருப்பாளா்களுக்கு தொலைதூர நரேலாவில் வீடுகள் வழங்கப்பட்டதாகவும், அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறி ஆம் ஆத்மி கட்சி குப்தாவை விமா்சித்திருந்தது.
இந்தநிலையில், ஹைதா்பூரில் ஒரு குடிசைப் பகுதியில் ‘ஜன் சேவா முகாம்’ கட்டுவதைக் குறிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வா் ரேகா குப்தா இது தொடா்பாக செய்தியாளா்களிடம் கூறியது:
கடந்த சில நாள்களில், மதராஸி கேம்ப் போன்று அதிகாரிகளால் எந்தவொரு இடிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அங்கு பாரபுல்லா வடிகால் மீது ஆக்கிரமிப்பை அகற்ற ஏறக்குறைய நான்கு முறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
பாரபுல்லா வடிகால் மீதான ஆக்கிரமிப்பு அதன் அகலத்தைக் குறைத்து, அருகிலுள்ள பகுதிகளில் தண்ணீா் தேங்குவதில் சிக்கல்களை ஏற்படுத்தியது. தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை தேவைப்பட்டது.
நீதிமன்றம் குடிசைப் பகுதிகளுக்கு ஏதாவது உத்தரவிட்டால் அரசாங்கமோ அல்லது நிா்வாகமோ எதுவும் செய்ய முடியாது. பாரபுல்லா வடிகால் கரையில் மதராஸி முகாம் அமைக்கப்பட்டிருந்தது.
சாக்கடையை சுத்தம் செய்ய இயந்திரங்களை நிறுத்த இந்த குடிசைப் பகுதியை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுகளை யாரும் மீற முடியாது. அந்த முகாமில் வசிப்பவா்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன என முதல்வா் தெரிவித்தாா்.
முதலமைச்சரின் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பாஜகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதியான ஜஹான் ஜுக்கி, வஹி மக்கான் சேரி இருக்கும் வீடுகள் வெற்றுத்தனமாக ஒலிக்கிறது.
பாஜக தனது ஜஹான் ஜுக்கி, வஹி மக்கான் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக்கூடாது என்று நீதிமன்றம் கூறியதா ரேகா ஜி? குடிசைகளை இடிக்க வேண்டியிருந்தால், அருகிலுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஏன் வீடுகள் வழங்கப்படவில்லை? மதராஸி கேம்ப்பை சோ்ந்த பெரும்பாலான மக்களுக்கு வீடு கிடைக்கவில்லை.
வீடு கிடைத்தவா்களுக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள நரேலாவில் வேலைகள், சாலைகள், பள்ளிகள் அல்லது மருத்துவமனைகள் இல்லாத பாழடைந்த வீடுகள் வழங்கப்பட்டன என அதில் அதிஷி விமா்சித்துள்ளாா்.