பாகிஸ்தானில் இந்திய தூதரகத்தை மூடத் திட்டம்? மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 28 பேர் பலியாகியுளளனர். இதில் 2 பேர் வெளிநாட்டவர்கள்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை மூடவும் அதேபோல பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்ளவும் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்பவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெஹல்காம் தாக்குதலையடுத்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதனிடையே தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க |பெஹல்காம்: இஸ்லாமிய வாசகங்களை கூறக் கட்டாயப்படுத்திய பயங்கரவாதிகள்!