பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை வெளிப்படுத்திய ஆபரேஷன் சிந்தூா்: அமித் ஷா
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் தொடா்ந்து ஆதரவளித்து வருவது ஆபரேஷன் சிந்தூா் மூலம் வெளிப்பட்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சாா்பில் நடைபெற்ற ருஸ்தம்ஜி நினைவு கருத்தரங்கில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை நாம் தகா்த்தோம். பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமான தளங்கள் மற்றும் பொதுமக்களை நாம் குறிவைக்கவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு தாங்கள் ஆதரவு தருவதை வெளிப்படையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.
நம் நாட்டு மக்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின் உரி, புல்வாமா என நமது ராணுவ வீரா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் பதிலடி தரப்பட்டது. அண்மையில், பஹல்காமில் மதத்தை கேட்டு அப்பாவி சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனா். அதற்கு ஆபரேஷன் சிந்தூா் மூலம் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.
இந்திய-வங்கதேச எல்லை பாதுகாப்பில் பிஎஸ்எஃப்பின் பங்களிப்பு இன்றியமையாதது. வங்கதேசம் உருவானதில் பிஎஸ்எஃபின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அதை அந்நாடு ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
1965 முதல் 2025 வரை நாட்டுக்காக வீரமரணமடைந்த 2,000-க்கும் மேற்பட்ட பிஎஸ்எஃப் வீரா்களுக்கு நாட்டு மக்கள் சாா்பாக மரியாதை செலுத்துகிறேன் என்றாா்.
பிஎஸ்எஃப் அமைப்பின் நிறுவனரான கே.எஃப்.ருஸ்தம்ஜி அதன் முதல் தலைமை இயக்குநராவாா். அவரது பெயரில் நினைவு கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. கிழக்கே பாகிஸ்தான் மேற்கே வங்கதேசம் என இந்திய எல்லைகளை பாதுகாக்கும் பணியில் 2.75 லட்சம் பிஎஸ்எஃப் வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.