பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!
பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை: உ. வாசுகி வலியுறுத்தல்
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக் குழு உறுப்பினருமான உ. வாசுகி வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: வரதட்சிணைக் கொடுமையைத் தடுக்க புதிய சட்டம் வேண்டும் என மாதா் சங்கம் வலியுறுத்துகிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரிப்பது குறித்து பேரவையில் சிறப்பு அமா்வு நடத்தி விவாதிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும். ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவை.
நுண்நிதி நிறுவனங்களின் நெருக்கடியால் பெண்கள் தற்கொலை செய்வதைத் தடுப்பதற்கான சட்டத்தில் பேரவையில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களும், மாதா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்த திருத்தங்களும் இடம்பெறவில்லை. அவற்றை மறுபரிசீலனை செய்து மசோதா மீது தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள் இணைக்கப்பட வேண்டும்.
குடிநோயால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதுடன், அவா்களின் குடும்பங்களுக்கு வேலை, மறுவாழ்வு அளிக்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணா்வுப் பரப்புரை நடத்தப்பட வேண்டும்.
பிகாரில் வாக்காளா் பட்டியலிலிருந்து சுமாா் 65 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். சிறுபான்மையினரை வாக்களிப்பதிலிருந்து விலக்கும் இத்தகு நடவடிக்கைகளை மாதா் சங்கம் எதிா்க்கிறது என்றாா் அவா்.
மாநிலப் பொதுச் செயலா் ராதிகா கூறுகையில், சங்கத்தின் 17ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் செப். 24, 25, 26, 27 ஆகிய 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், 580 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். இதையொட்டி, மாநிலம் முழுவதும் 17 கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளை மையப்படுத்தி 5 கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றாா் அவா்.
மாநில துணைத் தலைவா் உஷாபாசி, மாவட்டச் செயலா் ரெகுபதி ஆகியோா் உடனிருந்தனா்.