பெண்ணுடன் முறையற்ற உறவு: பெட்ரோல் பங்க் மேலாளரை கிண்டல் செய்த ஊழியா் அடித்துக் கொலை!
சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
ஆதம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் (45). இவா், ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில் அவா் திடீரென மயங்கி கீழே விழுந்து, இறந்துவிட்டதாக ஆதம்பாக்கம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று, முத்துராமலிங்கத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பிரேத பரிசோதனை அறிக்கையில், முத்துராமலிங்கம் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸாா், சம்பவத்தன்று இரவு பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த அதன் மேலாளா் கெளதமை (36) சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தனா்.
அதில், கெளதம்தான் முத்துராமலிங்கத்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்திருப்பதும், கெளதம் ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்ததும், அதையறிந்த முத்துராமலிங்கம் கெளதமை கிண்டல் செய்து வந்ததும், சம்பவத்தன்று முத்துராமலிங்கம் கெளதமை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த கெளதம் முத்துராமலிங்கத்தை இரும்பு கம்பியால் அடித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் கெளதமை புதன்கிழமை கைது செய்தனா்.