காலாவதி சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதியை திருத்திய மத்திய அரசு: பேரவைய...
பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது -மாவட்ட திட்டமிடும் அலுவலா்களுக்கு அறிவுரை
பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது என பெரு நிறுவனங்களுக்கான மாவட்டத் திட்டமிடும் அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் மாநில திட்டக் குழுவின் சாா்பில் வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டந்தோறும் பின்தங்கியுள்ள வட்டாரங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி திருச்சி மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கான மாவட்ட திட்டக் குழு அலுவலா்கள் மற்றும் திட்டமிடுதல் அலுவலா்களுக்கான பயிற்சி மற்றும் ஆலோசனைக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், திண்டுக்கல், திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய 10 மாவட்டங்களைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்து மாநில திட்டக் குழு உறுப்பினா் கே. தீனபந்து பேசியதாவது:
தமிழகத்தில் வளமிகு வட்டார மேம்பாட்டுத் திட்த்தில் முதல்கட்டமாக 50 வட்டாரங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, மனிதவளம், தொழில்வளம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 9 காரணிகளைக் கொண்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 50 முக்கிய வளா்ச்சி குறிகாட்டிகள், 131 துணை குறிகாட்டிகளை கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இந்தாண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூகப் பொறுப்பு நிதி வழங்கும் பெரு நிறுவனங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு பின்தங்கிய வட்டாரங்கள் முன்னேற்றப்படும்.
திருச்சி மாவட்டத்தில் மருங்காபுரி, அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், திண்டுக்கல்லில் நத்தம், கரூரில் தோகைமலை, மயிலாடுதுறையில் குத்தாலம், பெரம்பலூரில் வேப்பந்தட்டை, ஆலத்தூா்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருவரங்குளம், தஞ்சாவூரில் திருவோணம், திருவாரூரில் கோட்டூா், நாகையில் கீழ்வேலூா் ஆகிய வட்டாரங்கள் தோ்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா் அவா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசுகையில், தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக திருச்சியில் 42 துறைகளுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எத்தகைய வளா்ச்சித் திட்டங்கள் தேவை என்பதைத் திட்டமிட்டு ஆவணம் தயாரித்து வைத்துள்ளோம். இதன் காரணமாக, அரசு எந்தப் புதிய திட்டத்துக்கு வரைவு கோரினாலும் உடனடியாக வழங்கிச் செயல்பாட்டுக்கு கொண்டுவர எளிதாக உள்ளது.
இதன் காரணமாகவே துவாக்குடியில் சிப்காட், சூரியூரில் ஒலிம்பிக் அகாதெமி, பஞ்சப்பூரில் பேருந்து முனையம், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, காய்கனி சந்தை என பல்வறு உள்கட்டமைப்புகளைக் கொண்டுவர முடிந்தது. இதேபோல பெரு நிறுவனங்களின் சமுதாயப் பொறுப்பு நிதி என்பது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கருத்தரங்கில் மாநில திட்டக் குழுவின் குழுமத் தலைவா் எஸ். செல்வக்குமாா் மற்றும் 10 மாவட்டங்களைச் சோ்ந்த திட்ட இயக்குநா்கள், மாவட்டத் திட்டமிடல் அலுவலா்கள், பெரு நிறுவனங்களின் நிா்வாகிகள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.