சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
மகாராஷ்டிரா: குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்; மத்திய அரசின் அதிர்ச்சி அறிக்கை சொல்வது என்ன?
மகாராஷ்டிரா நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் பொருளாதார வளர்ச்சி நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது.
கிராமங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதுவும் பொதுமக்களுக்குச் சுகாதார வசதி கொடுப்பதில் மகாராஷ்டிரா அரசு மிகவும் பின் தங்கி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளே கிடைப்பதில்லை. மருத்துவமனைக்குச் செல்வதாக இருந்தால் பல கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டும்.

அப்படியே செல்வதாக இருந்தாலும் அதற்குப் போதிய போக்குவரத்து வசதியோ அல்லது சாலை வசதியோ இருப்பதில்லை. 1993ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 5 முறை மத்திய அரசால் தேசிய குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கணக்கெடுப்பு அறிக்கை வெளியாகி இருக்கிறது. நாட்டில் குறைந்த எடையுடன் குழந்தைகள் பிறப்பது 26 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரே ஆண்டில் நாடு முழுவதும் 42 லட்சம் குழந்தைகள் எடை குறைவுடன் பிறந்துள்ளது. அதிலும் உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மட்டும் 47 சதவீத குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்தான் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றன.
மகாராஷ்டிரா இதில் 3வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஒரே ஆண்டில் 4 லட்சம் குழந்தைகள் எடை குறைவுடன் பிறந்துள்ளன. நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் மகாராஷ்டிரா அரசு சுகாதார விவகாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பது மத்திய அரசின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சுகாதாரத்துறைக்கு மாநில அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பொருளாதார நிபுணர் மருத்துவர் ரவி துக்கல் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருக்கும் சுகாதாரத்திற்காக அருணாச்சலப் பிரதேச அரசு ஆண்டுக்கு 6706 ரூபாய் செலவிடுகிறது. ஆனால் மகாராஷ்டிரா 975 ரூபாய் மட்டுமே செலவிடுகிறது. ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைவு போன்ற காரணங்களால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படும் போது குழந்தைகள் எடை குறைவாகப் பிறக்கின்றன.