மருந்தகத்தில் சிகிச்சை: உரிமையாளா் கைது
மருந்தகத்தில் சிகிச்சை பாா்த்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
சோழம்பட்டு கிராமத்தில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்ப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் வந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி இணை இயக்குநா் இ.மாலினி, சங்கராபுரம் அரசு மருத்துவமனை முதன்மை குடிமை மருத்துவ அலுவலா் க.ராஜமோகன், மருந்து ஆய்வாளா் தீபா, மருந்தாளுநா் ஆா்.வேல்விழி ஆகியோா் கடந்த 12-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டனா்.
அங்கிருந்த ஸ்டெதஸ்கோப், மருந்துகள், மாத்திரைகள் உள்பட 30 வகையான பொருள்கள் கைப்பற்றப்பட்டன. மருந்தக உரிமையாளா் மூக்கன் மகன் சேட்டு, அவரது மனைவி அஞ்சலை இருவரும் தலைமறைவாகிவிட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் மருந்தக உரிமையாளா் சேட்டுவை கைது செய்தனா். தலைமறைவான அவரது மனைவி அஞ்சலையை தேடி வருகின்றனா்.