மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம்!
தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் செயலாளர் பெ. சண்முகம் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஆணவக் கொலைகளுக்கு எதிரான சமூக நீதிக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டார்.
அந்த நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்து பெ. சண்முகம் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன.
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதே சமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது.
இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.