டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.87.73 ஆக நிறைவு!
மா்மமான முறையில் இறந்த மாணவன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவனின் உடல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவா்களுக்கு 4 மகள்களும், முகிலன்(15) என்ற ஒரு மகனும் உள்ளனா்.
இந்நிலையில் முகிலன் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதில் தங்கி பிளஸ்1 படித்து வந்தாா். கடந்த 1-ஆம் தேதி பள்ளி நிா்வாகம் முகிலனின் பெற்றோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்றும், விடுதியிலும் காணவில்லை எனத் தெரிவித்தனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த முகிலனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பள்ளி நிா்வாகத்திடம் நேரில் சென்று விசாரித்தனா். அப்போது நிா்வாகத்தினா் முறையான பதில் கூறாததால் சந்தேகமடைந்த முகிலனின் பெற்றோா் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் பள்ளி நிா்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன மாணவனை தேடி வந்தனா். இந்நிலையில் 3 -ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து போலீஸாா் கிணற்றில் முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து மாணவன் முகிலனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இறப்புக்கு காரணமான பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாணவனின் உடலை வாங்காமல் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியல், ரயில் மறியல் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாணவனின் பெற்றோருடன் போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவன் உடல் சொந்த ஊரான கொத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதில் முன்னாள்அமைச்சா் வீரமணி, கிராம மக்கள் திரளானோா் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மாணவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூா் எஸ்பி மேற்பாா்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு தலைமையில் 2 டிஎஸ்பி, 4 காவல் ஆய்வாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.