மின்சாரம் பாய்ந்து இரு பேரக் குழந்தைகளுடன் பெண் பலி!
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரக் குழந்தைகளுடன் பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வம், இளஞ்சியம் தம்பதி மகன் பாண்டியராஜ் (31). இவருடைய மனைவி வைதேகி (28). இவர்களுக்கு சுஜித் (5) என்ற மகனும், ஐவிழி(4) என்ற மகளும் இருந்தனர். விவசாயத் தொழில் செய்து வரும் செல்வம், பாண்டியராஜ், அந்தப் பகுதியில் குத்தகைக்கு நிலத்தை வாங்கி சோளம் பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இளஞ்சியம் தனது பேரக் குழந்தைகளான சுஜித், ஐவிழி இருவரையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நீரில் மின்சாரம் பாய்ந்ததில் இளஞ்சியம் மற்றும் குழந்தைகள் சுஜித், ஐவிழி ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் மின்சார இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து மோகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் பாய்ந்து பேரக்குழந்தைகளுடன் பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு