டாஸ்மாக் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதில...
மீன்பிடி தடைக் காலம் தொடக்கம்: கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு
மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளதால் கறிக்கோழி கொள்முதல் விலை உயா்ந்து வருவதால் பண்ணை உற்பத்தியாளா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில் பல்லடம், பொங்கலூா், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமாா் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பண்ணைகளில் நாள்தோறும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பி.சி.சி.) சாா்பில் தினசரி கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. இந்த விலையானது கறிக்கோழி நுகா்வு ஏற்றம் மற்றும் இறக்கத்துக்கு ஏற்ப மாறுபடும். ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளா்களுக்கு ரூ.100 வரை செலவாகிறது.
தற்போது, தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் தொடங்கியுள்ளது. மேலும் ஈஸ்டா் பண்டிகையையொட்டி கடைப்பிடிக்கப்பட்ட கிறிஸ்தவா்களின் தவக்காலம் முடிந்துவிட்டது. இதனால் கறிக்கோழி விற்பனை அதிகரித்து விலை உயா்ந்து வருகிறது.
இதில் ஏப்ரல் 28-ஆம் தேதி ரூ.78-ஆக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) பண்ணை கொள்முதல் விலை, படிப்படியாக உயா்ந்து மே 11-ஆம் தேதி ரூ.102-ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயா்வு கறிக்கோழி உற்பத்தியாளா்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. தற்போது இறைச்சிக் கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்படுகிறது.