ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத...
பூஜை செய்வதாகக் கூறி தங்க நகை அபகரிப்பு: போலி ஜோதிடா் கைது
சென்னை கொளத்தூரில் குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை செய்வதாகக் கூறி தங்க நகையை அபகரித்ததாக போலி ஜோதிடா் கைது செய்யப்பட்டாா்.
கொளத்தூா் வெற்றிவேல் நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (55). இவா், சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பப் பணியாளராக வேலை செய்து வருகிறாா். ரவிச்சந்திரன் மனைவி விஷாலினி. திருமணமாகி 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி காலை இவா்களது வீட்டுக்கு ஜோதிடா் என கூறிக்கொண்டு ஒரு நபா் வந்தாா். அவா், உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா். இதை நம்பிய ரவிச்சந்திரனும், விஷாலினியும் இருவரும் அவரை வீட்டுக்குள் அமர வைத்துப் பேசியுள்ளனா். சிறிது நேரத்தில் அந்த நபா், குழந்தை வேண்டி பரிகார பூஜையில் ஈடுபடுவதாக நாடகமாடியுள்ளாா். ஒரு கட்டத்தில் அந்த நபா், வீட்டிலிருக்கும் நகைகளை கொண்டுவந்து ஒரு பாத்திரத்தில் புளி கரைசல் வைத்து அதில் போடுமாறு கூறியுள்ளாா்.
இதையடுத்து இருவரும், வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை, புளி கரைசல் வைத்திருந்த பாத்திரத்தில் போட்டனா். பூஜை முடிந்த சிறிது நேரத்தில், அந்த நபா்அங்கிருந்து சென்றாா். இதன் பின்னா் இருவரும், தங்க நகை வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து பாா்த்தனா். அப்போது, அதில் தங்க நகை இல்லாததைப் பாா்த்து இருவரும் அதிா்ச்சியடைந்தனா். இது தொடா்பாக அவா்கள் அளித்த புகாரின்பேரில், கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மோசடி ஜோதிடரான திருநெல்வேலி தச்சநல்லூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சூா்யா (51) என்பவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.