இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
முகலாய அரசர்களின் பெயரில் சாலைகளா? கருப்பு மை பூசி அழித்த புத்த மத அமைப்பினர்!
தில்லியில் முகலாயர்கள் மற்றும் சுல்தான் ஆட்சியாளர்களின் பெயர்களைக் கொண்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளில் புத்த மத அமைப்பினர் கருப்பு மை பூசி அழித்தனர்.
புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகலாய மன்னர்களின் பெயர் கொண்ட சாலைகளின் பெயர்ப் பலகைகளில் பாரதிய பௌத்த சங்கத்தின் நிர்வாகிகள் கருப்பு மை பூசி அழித்தனர்.
இதில், ஷாஜகான் சாலைக்கு பதிலாக வீர் சாவர்க்கர் சாலை, துக்ளக் சாலைக்கு பதிலாக அஹில்யா பாய் சாலை, அக்பர் சாலைக்கு பதிலாக மகரிஷி வால்மிகி சாலை, ஹுமாயுன் சாலைக்கு பதிலாக பாலாசாகேப் தாக்கரே சாலை போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிச் சென்றனர்.
இதுபற்றி புது தில்லி முனிசிபல் கவுன்சில் சார்பாக உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் பற்றிப் பேசிய பாரதிய பௌத்த சங்கத்தின் தலைவர் சங்பிரியா ராகுல், “பல கொடுமைகளை நிகழ்த்திய முகலாய மன்னர்களின் பெயரைப் பொது இடங்களுக்குச் சூட்டுவதைத் தடுக்குமாறு பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கவுள்ளோம். எங்களுக்கு முகலாயர்களின் பெயர்கள் தேவையில்லை” என்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் 20 அன்று மஹாராணா பிரதான் சிலை சேதப்படுத்தப்பட்டதகாக் கூறப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் அக்பர் சாலையின் பெயர்ப் பலகையை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதேபோல, கடந்த மாதமும் அக்பர் சாலை, ஹுமாயுன் சாலை பெயர்ப் பலகைகளில் சத்ரபதி சிவாஜியின் போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பாஜக தலைவர் தினேஷ் சர்மா மற்றும் மத்திய அமைச்சர் கிருஷ்ணன் பால் குர்ஜார் ஆகியோர் துக்ளக் சாலையில் உள்ள தங்களது வீடுகளின் பெயர்ப் பலகைகளில் விவேகானந்தா சாலை என குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் துக்ளக் சாலை என எழுதியிருந்தனர்.