"முருகன் மாநாடு வீடியோவை வன்மையாகக் கண்டிக்கிறோம்; போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா?" - அதிமுக
மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் பேரறிஞர் அண்ணா, பெரியார் ஆகியோர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பா.ஜ.க-விடம் பண்ணையடிமையாகிவிட்ட அ.தி.மு.க இதை ரசிப்பதாகவும் தி.மு.க -வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆர்.எஸ். பாரதியின் அறிக்கைக்கு எதிர்வினையாற்றும் வகையில் தி.மு.க-வை விமர்சித்து அ.தி.மு.க அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் அ.தி.மு.க, "அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் தி.மு.க, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், "Take Diversion" என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அ.தி.மு.க மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது.

தி.மு.க-வின் அமைச்சர் அடிபொடிகள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, அறிவாலய Gatekeeper ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும் கக்கியுள்ளது தி.மு.க.
"திராவிடத்தை அழிக்க முருகா வா" என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத்தான் யாராவது அழித்துவிட முடியுமா?
திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி!
மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்? தி.மு.க-வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative.
இதைச் செய்வதற்கு தி.மு.க வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் தி.மு.க-வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க தான் அ.தி.மு.க விட்டுவிடுமா? திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்!
— AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) June 23, 2025
பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை!
அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும்…
"ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள்.
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அ.தி.மு.க என்பதால்தான், கடவுள் பக்தியைப் பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு எடப்பாடியார் ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்.
எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல.
அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அ.தி.மு.க-வைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
அதேபோல், அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அதற்கு அதிமுக சார்பில் எங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை.

மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாகத்தான் நாங்களும் அறிந்து கொண்டோம்.
ஜாதியின் பெயரால் மக்கள் பிரிவுண்டு இருக்க, அந்த ஜாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே "கடவுள் மறுப்பு" கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் தந்தைப் பெரியார்.
பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல; மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் ஜாதிய பேதங்கள் மீதுதான்!
"நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்" என அரசையும் மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, Secularist அரசியலை முன்னெடுத்தவர், நாங்கள் பெயரில் மட்டுமல்ல, எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் இதயதெய்வம் பேரறிஞர் அண்ணா.
பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட தி.மு.க பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல், எஸ்.பி. வேலுமணி தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திவிட்டார்." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.