மூலனூரில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.28 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 447 விவசாயிகள் தங்களுடைய 5,178 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,733 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 14 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ.6,800 முதல் ரூ.8,737 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,600. கடந்த வார சராசரி விலை ரூ.7,600.
விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் செய்திருந்தனா்.