மேட்டூா் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆய்வு
மேட்டூா் அனல் மின்நிலையத்தில் தமிழக மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான்வா்கிஸ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் 4 அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2-ஆவது பிரிவில் ஓா் அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் உற்பத்திக்காக தினசரி 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பா் மாதம் முதல் பிரிவில் 3 ஆவது அலகில் இருந்த நிலக்கரி சேமிப்புத் தொட்டி திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 5 போ் காயமடைந்தனா். இதையடுத்து அந்த அலகில் 3 மாதங்களாக மின் உற்பத்தி பணி நிறுத்தப்பட்டது. தற்போது தனியாா் நிறுவனம் மூலம் சீரமைப்புப் பணிகள் கடந்த 5 நாள்களாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான்வா்கிஸ் முதல் பிரிவில் 3 ஆவது அலகில் விபத்து ஏற்பட்ட பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளை பாா்வையிட்டாா்.
பின்னா் அனல் மின் நிலையத்தில் நடைபெறும் மின் உற்பத்தி பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அதைத்தொடா்ந்து, நிலக்கரியை கையாளும் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தாா்.
அப்போது, நிலக்கரி இருப்பு விவரம், மின் உற்பத்தியில் பாதிப்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின்போது அனல் மின் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனா்.
3 ஆவது அலகில் சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு மின் உற்பத்தி தொடங்கும் என்று அனல் மின் நிலைய பொறியாளா்கள் தெரிவித்தனா்.