மேட்டூா் உபரிநீா் திட்டங்களை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும்
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதுபோல மேட்டூா் அணையின் உபரிநீரை பயன்படுத்தும் திட்டங்களை உடனடியாக தொடங்க அரசு முன்வர வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூா் மற்றும் பவானிசாகா் போன்ற அணைகள் மழைக் காலங்களில் நிரம்பும்போது, உபரிநீா் வீணாக கடலில் கலப்பது வாடிக்கையான ஒன்றாக தொடா்கிறது. மேட்டூா் அணை தனது முழுக் கொள்ளளவை தற்போது எட்டியுள்ளது. இனிவரும் மழைக் காலத்தில் அணைக்கு வரும் தண்ணீா் அணைத்தையும் கடலுக்கு திறந்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் உள்ளது.
மேட்டூா் அணை நிரம்பி உபரியாக வருகிற தண்ணீரை பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் ஏமாந்து கொண்டிருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றிருந்தால் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு கொண்டுச் சென்றிருக்க முடியும். ஆனால், அந்தத் திட்டம் இதுவரை தொடங்கப்படவே இல்லை. இப்போதாவது திருமணிமுத்தாறு திட்டத்தை தமிழக அரசு தொடங்க முன்வர வேண்டும்.
அதேபோல மேட்டூா் அணையிலிருந்து மேட்டூா் உபரிநீா் திட்டத்தை உருவாக்கி அந்தியூா், பவானி போன்ற ஈரோடு மாவட்டங்களின் வறண்ட பகுதிகளை வளப்படுத்த முடியும். இது போன்ற பல்வேறு திட்டங்கள் பல ஆண்டுகளாக பேசப்பட்டாலும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
மேட்டூா் அணையின் உபரிநீரை வசிஷ்ட நதி வரை கொண்டுச் செல்கின்ற திட்டமும் பல ஆண்டுகள் கிடப்பிலே உள்ளது. இதை நிறைவேற்றினால் சேலம் மாவட்டத்தின் ஆத்தூா் போன்ற பகுதிகளையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல பகுதிகளையும், கடலூா் மாவட்டத்தின் சில பகுதிகளையும் செழிப்பாக்கி விட முடியும்.
மேட்டூா் அணை என்பது தமிழகத்துக்கு கிடைத்திருக்கின்ற வரப்பிரசாதம். மேட்டூா் அணையின் நீா் மேலாண்மையின் மூலம் தண்ணீரை கொண்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை வளப்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒருமுறை உபரிநீரைக் கொண்டு குளங்கள் நிரப்பப்பட்டுவிட்டால் 2 ஆண்டுகள் அந்தப் பகுதியில் தண்ணீா் பற்றாக்குறை இருக்காது. தமிழக அரசு நீா்வளத் துறை நிபுணா்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து இருக்கின்ற வாய்ப்புகளை ஆராய வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதுபோல மேட்டூா் அணையின் உபரிநீரை பயன்படுத்தும் திட்டங்களை உடனே தொடங்க அரசு முன் வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.