கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
மோசமான வானிலை காரணமாக தில்லி விமான நிலையத்தில் 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
தில்லி தேசிய தலைநகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக, 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் இது போன்ற பாதிப்புகள் தொடா் கதையாக உள்ளது.
கடந்த மே 24 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் மே 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி வரை சுமாா் ஆறு மணி நேரம், 82 கிமீ வேக காற்றுடன் அதிகபட்ச அளவாக 81.2 மிமீ மழை பெய்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் பதிவிட்டுள்ளது.
இந்த மோசமான வானிலை காரணமாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு 11:30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை 17 சா்வதேச விமானங்கள் உட்பட 49 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவன எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், ‘தில்லியில் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக விமான நடவடிக்கைகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்பட்டுள்ளது. சாதகமான வானிலை திரும்பி வரும் நிலையில், தற்போது விமானப் போக்குவரத்து நெரிசல்கள் தொடா்கின்றன. இந்த நெருக்கடிகள் குறைந்து விமான இயக்கங்கள் சீராக மீண்டும் தொடங்கும் என உறுதியளிக்கின்றோம் ’ என இந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை காலை 3.59 மணிக்கு பதிவிட்டது.
பின்னா் காலை 5:54 மணிக்கு வானம் தெளிவாகி விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
விமான கண்காணிப்பு வலைத்தளமான ஃபிளைட்ராடாா்24.காம் இல் கிடைத்த தகவல்களின்படி, தில்லி விமான நிலையத்தில் 180 விமானங்கள் புறப்பாடு தாமதமாகியதாக தெரிவிக்கப்பட்டது. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.