இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
லெபனான் - சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம்!
லெபனான் மற்றும் சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தானது.
லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சௌதி அரேபியா நாட்டில் நேற்று (மார்ச் 27) இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்குபெற்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லையில் நிலவி வந்த பதற்றமானது தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 54 ஆண்டுகள் சிரியாவை ஆண்டு வந்த ஆசாத் குடும்பம் வெளியேற்றப்பட்டு இடைக்கால அரசு அமைந்ததிலிருந்து, லெபனானுடனான எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்தது. இரு நாட்டு எல்லைகளிலும் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் அசாத் படைகளுடன் இணைந்து சிரியாவின் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 14 ஆண்டுகள் நீடித்த இந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
இம்மாத துவக்கத்தில் சிரியா மற்றும் லெபனான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற மோதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், கடந்த சில வாரங்களாக இருநாட்டு அதிகாரிகளும் சுமார் 400 கி.மீ. எல்லையிலிருந்த கடத்தல் வழிகளைக் கண்டறிந்து முடக்கி வந்தனர்.
இந்நிலையில், இரு நாடுகளும் தங்களது எல்லையை வரையறுக்கவும் பல்வேறு துறைகளில் சட்டப்பூர்வமான சிறப்பு ஆணையங்களை உருவாக்கவும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்களது எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டாகினால் ஒருங்கிணைந்த வழிமுறைகளை செயல்படுத்த முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், இரு நாடுகளின் பகுதியில் பாதுகாப்பை நிலைநாட்ட சௌதி அரேபியா துணை நின்று ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 26 லெபனான் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கெல் மெனாஸாவின் சிரியா பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிரியா அமைச்சர் முர்ஹாஃப் அபு கஸ்ரா சௌதி அரேபியாவின் ஜெட்டாஹ்வுக்கு பயணம் செய்தார். அங்கு, சௌதி பாதுகாப்புத் துறை அமைச்சர் காலித் பின் சல்மான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
இதையும் படிக்க:பாங்காக்: நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த 30 மாடி கட்டடம்... 43 பேரின் கதி என்ன?