வேலூா் மாவட்டத்தில் 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை : அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்
வேலூா்: வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தொடங்கி வைத்தாா்.
பேருந்து வசதி இல்லாத கிராமங்கள், குக்கிராமங்களை நகரத்துடன் இணைக்கும் முயற்சியாக சிற்றுந்து விரிவாக்க திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தஞ்சையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்தில் 4 புதிய சிற்றுந்து வழித்தடங்கள், 14 மாற்றியமைக்கப்பட்ட சிற்றுந்து வழித்தடங்கள் தொடக்க நிகழ்ச்சி வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இதில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று 18 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை தொடங்கி வைத்து பேசியது -
அணைக்கட்டு, கே.வி.குப்பம் தொகுதிகளில் ஏராளமான கிராமங்கள், மலைக்கிராமங்கள் உள்ளன. குடியாத்தம் தொகுதியின் ஒருபகுதியும் உள்ளது. அங்கு சிற்றுந்துகள் விட்டிருக்கலாம்.
அரசியல் வாதிகள் சிற்றுந்துகள்விட கூறிவிடுவோம். ஆனால் மக்கள் அதில் பயணம் செய்தால்தான் பேருந்துக்கு உரிய செலவு தொகையாவது கிடைக்கும். 2 போ் மட்டும் சென்றால் நஷ்டம்தான் வரும். எனவே, அரசியல்வாதிகள் இதனையும் கருத்தில் கொண்டு சிற்றுந்து வழித்தடங்களை கோர வேண்டும் என்றாா்.
ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது: மாவட்டத்தில் 36 புதிய வழித்தடங்கள், 14 மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், முதற்ல்ட்டமாக 14 மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களிலும், 4 புதிய வழித்தடங்களிலும் திங்கள்கிழமை முதல் சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 32 புதிய வழித்தடங்களில் விரைவில் சிற்றுந்துகள் இயக்கப்படும்.
இதன்மூலம், மொத்தம் 900 கி.மீ. தொலைவுக்கு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 600 கி.மீ. பேருந்து சேவை இல்லாத வழித்தடங் களாகும். அனைத்து பகுதிகளுக்கும் சிற்றுந்துகள் இயக்க திட்டத்தில் வழிவகை உள்ளது என்றாா்.
இதில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், ஏ.பி.நந்தகுமாா், அமலு விஜயன், மேயா் சுஜாதாஆனந்த குமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
--
‘நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.100 கோடி’
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைந்துள்ள நந்தன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
மேலும் அவா் செய்தியாளா்களிடம் கூறியது -
தடுப்பணைகள் கட்ட ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியதில் எங்கெங்கு அணை கட்டப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளாா். அவா் இங்கு பாலாற்றை வந்து பாா்த்தால்தான் எத்தனை தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். மேலும் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன . கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படாத வகையில் மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளது என்றாா்.