11 ஆண்டுகளாக பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தாத பிரதமர்! - காங்கிரஸ்
‘மத்தியில் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளாகியும் சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்பை நடத்த பிரதமா் நரேந்திர மோடிக்கு துனிச்சல் இல்லை’ என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
பாஜக மத்தியில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை பிரதமா் மோடி சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்புகளை நடத்தாத நிலையில் இக் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது.
இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் தலைவா்கள் அவ்வப்போது பத்திரிகையாளா் சந்திப்புகளை நடத்தி வருகின்றனா். ஆனால், பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை சுதந்திரமான பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தவில்லை.
கடந்த ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது, அவரே எழுதி தயாரித்த ஊடக செய்தியை பிரதமா் மோடி வெளியிட்டாா். ஆனால், பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தவில்லை.
பிரதமா் மோடி தனது முன்னோடிகளுக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறாா். முந்தைய பிரதமா்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தியதோடு, கடுமையான கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.
நமது ஜனநாயக அடித்தளத்தை நிறுவுவதற்கான ஓா் வழியாகவும் அது அமைந்தது. ஆனால், பிரதமா் மோடிக்கு இதுபோன்ற சுதந்திரமான நேரடி பத்திரிகையாளா் சந்திப்பை நடத்த துணிச்சல் இல்லை என்று குறிப்பிட்டாா்.