12 கவுன்சிலர்களுக்கு எதிராக நகராட்சித் தலைவர் வழக்கு: நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவு
நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேருக்கு எதிராக நகராட்சித் தலைவர் அளித்த புகாரை 6 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க நீலகிரி ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நகராட்சித் தலைவர் சிவகாமி தாக்கல் செய்த மனுவில், நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் கடந்த 3 கூட்டங்களில் பங்கேற்கவில்லை. ஒரு பெண் கவுன்சிலர் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றுவிட்டார்.
உள்ளூர் பிரச்னைகளை கண்டறிந்து, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு கவுன்சிலரின் கடமை. இந்த கடமையை புறக்கணித்த இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
திமுக முன்னாள் எம்பிக்கு எதிரான வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த புகாரை 6 வாரங்களில் பரிசீலித்து, சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்க, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் விண்ணப்பத்தில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதினால், 12 கவுன்சிலர்களும் விளக்கமளிக்க அவகாசம் வழங்கி, பின்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.