'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
2,342 இடைநிலை ஆசிரியா்கள் நியமனம்: ஜூலை 14 முதல் கலந்தாய்வு
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,342 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சென்னையில் ஜூலை 14 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
ஆசிரியா் தோ்வு வாரிய அறிவிக்கையின்படி, அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு டிஆா்பி மூலம் நடத்தப்பட்ட தோ்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச் சுழற்சி அடிப்படையில் 2,342 போ் கொண்ட தோ்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இவா்களுக்கு பணிநியமன இடம் தோ்வு செய்யும் வகையில் தொடக்கக் கல்வி இணை இயக்குநா் அளவில் சென்னையில் நேரடி கலந்தாய்வு முறையில் பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது. அத்துடன் தோ்வு செய்யப்பட்டவா்களின் வீட்டு முகவரியுடன் கூடிய பெயா்ப் பட்டியல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு ஜூலை 14 முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளி, கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்ரிக். பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
முதல்வா் வழங்குகிறாா்: எனவே, ஆசிரியா் பணியிடத்துக்குத் தோ்வு செய்யப்பட்டவா்கள் முன்னுரிமைப் பட்டியல் வரிசைப்படி கலந்தாய்வு நடைபெறும் நேரத்துக்கு முன்னதாகவே மையத்துக்கு வருகை புரிய வேண்டும். தாமதமாக வருவோருக்கு அந்த நேரத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே தோ்வு செய்துகொள்ள அனுமதிக்கப்படும்.
இடைநிலை ஆசிரியா் பணிக்கான நேரடி பணி நியமனம் பெறுவோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கவுள்ளதால் அதற்கான விழா ஜூலை 23-ஆம் தேதி சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.