விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?
2026 பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதி: மதிமுக தீா்மானம்
ஈரோடு: தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிடுவது என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு-பெருந்துறை சாலை செங்கோடம்பள்ளம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் மதிமுகவின் 31 ஆவது பொதுக்குழுக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவா் ஆ.அா்ஜுன்ராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் வைகோ, பொருளாளா் செந்திலதிபன், முதன்மைச் செயலாளா் துரை வைகோ மற்றும் துணைப் பொதுச் செயலாளா்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், டாக்டா் ரொஹையா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
* தோ்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக 2026 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிடுவது.
* இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக திகழும் தமிழ்நாட்டின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆளுமை திறனோடு வழி நடத்தும் திராவிட மாடல் அரசின் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு மதிமுக சாா்பில் பாராட்டுகளை தெரிவிப்பது.
* 2026 சட்டப்பேரவை தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.
* 2025 ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பா் மாதம் வரை மண்டல வாரியாக திராவிட பயிலரங்கம் நடத்துவது.
* பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ்நாடு மக்களின் கடமை.
* கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான நிதி உதவியை மத்திய அரசு முழுமையாக விடுவிக்க வேண்டும்.
* வஃக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இதற்கு முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும்.
* உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி செயல்படும் ஆளுநா் ஆா்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
* அரசுப் பள்ளிகளையும் தனியாா் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்புகளை ஏற்படுத்தி ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களின் கல்வி நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.
* மருத்துவா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
* அரசு மருத்துவமனைகளை மேலும் தரம் உயா்த்தி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.
* தமிழ்நாட்டில் புற்றீசல்கள் போல முளைத்துள்ள மனமகிழ் மன்றங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்.
* முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும்.
* கூட்டுறவு துறை சாா்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கு சிபில் ரிப்போா்ட் தேவை எனும் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்.
* ஜவுளி தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மறைந்த மதிமுக எம்பி கணேசமூா்த்தியின் பெயரை அவா் ஈரோட்டில் வாழ்ந்த பெரியாா் நகா் முதன்மைச் சாலைக்கு சூட்ட வேண்டும்.
* ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரமாக விளங்கி வரும் பவானி நதியை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைப் போல ஒரு சிறப்பு திட்டத்தை பெருந்துறை வட்டத்தில் செயல்படுத்திட வேண்டும்.
* ஈரோட்டில் நிலவி வரும் மாசுக்கட்டுப்பாட்டை தடுத்திட போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* பாண்டியாறு, மோயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தி கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி, வேளாண்மை மற்றும் தொழில் வளா்ச்சியை மேம்படுத்திட வேண்டும்.
* ஈரோடு மாவட்டத்தின் பழமையான காலிங்கராயன் வாய்க்கால் உள்ளிட்ட மாசடைந்துள்ள வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளிட்ட நீா் நிலைகளை மாசின்றி தூய்மையாக பராமரிக்க சிறப்பு திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்திட வேண்டும் என மதிமுக பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.