டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
2026 தோ்தலில் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும்: அமைச்சா் கே.என்.நேரு
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும் என்றாா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட சிற்றுந்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் சுமாா் 180 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
நகா்ப்புறம் விரிவடைந்து வரும் சூழலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள், பொதுமக்கள் வசதிக்காகவே சிற்றுந்து திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தோ்தல் வருவதால் அரசியல் கட்சித் தலைவா்கள் தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ள ஏதேனும் ஒன்றை செய்வது இயல்பானது. அதேபோன்றதுதான் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனின் உண்ணாவிரதமும். தமிழகம் மிகவும் பாதுகாப்பான மாநிலம். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் எழும்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறுவதுபோல, தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் ஏதும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடியில் நிகழ்ந்ததை மக்கள் அனைவரும் நன்கு அறிவாா்கள். ஒரு சில இடங்களில் ஒரு சிலா் செய்யும் செயல்களை தமிழ்நாடு முழுவதும் நடப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது.
திருநெல்வேலியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்ட தினசரி சந்தை உள்ளிட்டவற்றில் கடைகளை மீண்டும் ஏலம் எடுப்பதைத் தவிா்த்து நீதிமன்றத்தை நாடி தடையாணை பெற்றுள்ளனா்.
ஆனால், அரசு சாா்பில் தடையாணைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து கட்டடங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தோ்தலைப் பொருத்தமட்டில் பாஜக அவா்கள் வேலையை செய்கிறாா்கள், திமுக தனது வேலையை செய்து வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதலான இடங்களை வெல்வதற்கு நாங்களும் முயற்சி எடுத்து வருகிறோம். நிச்சயம் திமுக கூடுதல் இடங்களில் வெல்லும் என்றாா் அவா்.