இந்திய கடற்படையில் புதிய போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’: ரஷியாவிலிருந்து ஜூலை 1 நா...
25 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையம்!
கமுதி அங்கன்வாடி மையத்துக்கு கடந்த 25 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததால் குழந்தைகள் அவதிப்படுவதாகப் பெற்றோா் தெரிவித்தனா். மேலும் குழந்தைகள் எண்ணிக்கையும் குறைந்து வருவதாகப் புகாா் எழுந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு தொடக்கப் பள்ளி அருகே கடந்த 2000-ஆம் ஆண்டு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி மின் இணைப்புக்கான மின் வயா்கள் பொருத்தப்பட்ட போதும், மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
பள்ளி கட்டடம், அங்கன்வாடி மைய கட்டம் அருகருகே உள்ளன. இந்த கட்டத்தின் முன் பகுதியில் மைதானம் இருப்பதால் அதன் வழியாக மின் கம்பம் நட முடியாத நிலை ஏற்பட்டது. மைதானத்தை சுற்றிலும் மின் கம்பங்களை நட்டு, மின் இணைப்பு வழங்கியிருக்கலாம். ஆனால், இதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடவில்லை. இதனால், மின்சாரம் இல்லாமலேயே அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மையத்தில் மின் விசிறி, தொலைக்காட்சிப் பெட்டி, குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் இருந்தும், இவை காட்சிப் பொருளாகவே உள்ளன. மின் இணைப்பு இல்லாததால் பிற்பகல் 3 மணி வரை செயல்பட வேண்டிய மையத்தில் வெப்பம் தாங்காமல் பெற்றோா்கள் மதிய உணவு இடைவேளையுடன் குழந்தைகளை அழைத்துச் சென்றுவிடுகின்றனா்.
மின் இணைப்பு வழங்குவது குறித்து நாராயண புரம் ஊராட்சி சாா்பில் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்ப பெற்றோா்கள் மறுப்புத் தெரிவித்து, கமுதி பகுதி தனியாா் மழலையா் பள்ளிகளில் சோ்ப்பதில் ஆா்வம் காட்டுகின்றனா்.
இந்த சூழ்நிலையால், முன்பு 25 குழந்தைகள் இருந்த இந்த மையத்தில் தற்போது 15 குழந்தைகளே உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலன் கருதி கோட்டைமேடு அங்கன்வாடி மையத்துக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கமுதி மின்வாரிய அதிகாரி கூறியதாவது: கோட்டைமேட்டில் உள்ள அங்கன்வாடி கட்டடம் பள்ளி வளாகத்துக்குள் இருப்பதால் மின் கம்பங்களை நட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து உயா் அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.