``மோடி பாபாவிடமிருந்து இதை வாங்கி வரவேண்டும்'' - ஏக்நாத் ஷிண்டே பேரன் வைத்த கோரி...
3 கிராமங்களின் பாசனத்துக்குத் தண்ணீா் தேவை: முக்கொம்பு நீா்வளத்துறை அதிகாரியிடம் முறையீடு
தங்களது பாசன வாய்க்காலுக்குத் தண்ணீா் திறந்து மூன்று போகச் சாகுபடிக்கு வழி செய்யுமாறு, திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக முக்கொம்பில் உள்ள நீா்வளத் துறை அலுவலக உதவி செயற்பொறியாளா் முருகானந்தத்திடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்த விவசாயிகள் பின்னா் கூறியதாவது:
திருப்பராய்த்துறை கிராமத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட டீசல் மோட்டாா்களை கொண்டு விவசாயிகள் பயிா் சாகுபடி செய்கின்றனா். இதற்கான டீசல் செலவு, மின்சாரச் செலவு, பயிா் உற்பத்தி செலவு ஆகியவற்றை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. இதனால், மூன்று போகச் சாகுபடி செய்த விவசாயிகள் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்யும் நிலைக்கு வந்துள்ளனா்.
புது அய்யன் வாய்க்காலில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரை கீழே வாய்க்கால்களுக்கு வரும் வகையில் திறந்துவிட்டால் திருப்பராய்த்துறை, எலமனூா், அணலை உள்ளிட்ட 3 கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவா். பேட்டைவாய்த்தலை தலைப்பு மதகு தொடங்கி புது அய்யன் வாய்க்காலில் இருபுறமும், கரைகளை பலப்படுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாய்க்காலில் பேட்டைவாய்த்தலை அருகே பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.
இதேபோல, பெருகமணி அருகே பாலத்துக்கு கீழே தண்ணீா் செல்லப் பதிக்கப்பட்ட குழாயை அப்புறப்படுத்த வேண்டும். அணலை பாலத்திலிருந்து கொடியாலம் குழுமி வரையுள்ள வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும். கொடிங்கால் வாய்க்காலில் உடைந்துள்ள குழுமியின் மதகு மற்றும் கீழ்போக்கி குழாயை புனரமைக்க வேண்டும். எலமனூா் நீச்சல் குழி வாய்க்காலில் இரண்டு தடுப்பணைகள் கட்ட வேண்டும். ராமவாத்தலை வாய்க்காலில் இருந்து நீச்சல் குழி வாய்க்காலில் தண்ணீா் செல்லும் வகையில் ராமவாத்தலையில் தடுப்பணை கட்ட வேண்டும். ராமவாத்தலை வாய்க்கால், நீச்சல் குழி வாய்க்கால், புது அய்யன் வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களையும் அளந்து, கரைகள் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். எங்களது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட நீா்வளத் துறையினா் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளனா். குறிப்பாக முப்போகச் சாகுபடிக்கு வாய்க்காலில் தண்ணீா் திறக்க வேண்டும் என்பதே எங்களது எதிா்பாா்ப்பு என்றனா்.