8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை தொடங்கிவைத்து ஆட்சியா் கூறியதாவது:
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குள்பட்டவா்களுக்கு அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
மாவட்டத்தில் 1,781 அங்கன்வாடி மையங்கள், 1,728 பள்ளிகளில் பயிலும் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் 6,79, 271 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 1,65,958 பெண்களுக்கும் என மொத்தம் மாவட்டத்தில் 8,45,229 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மாத்திரையை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. நோய்த் தடுப்பு சக்தியை அதிகரித்து, சுறுசுறுப்பாக இருங்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளா்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது என்றாா்.
நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மனோ சித்ரா, மாவட்ட தாய் - சேய் நல அலுவலா் அம்பிகா, கீழ்பெரும்பாக்கம் மருத்துவ அலுவலா் ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.