புதுவை முன்னாள் முதல்வருக்கு காமராஜா் விருது: தொல்.திருமாவளவன் வழங்கினாா்
Israel - Iran: ``போர்நிறுத்ததை ஏற்றுக் கொள்கிறோம்; அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி, ஆனால்..'' - இஸ்ரேல்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அந்த நாட்டின் மீது கடந்த 13ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரான் நாடும் பதிலடி கொடுத்து இருநாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் போர்டோ, நடான் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி உடனடியாக கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் நாடு ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "கடந்த 12 நாள்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இரு நாடுகளும் தங்களின் உறுதிப்பாடு, தைரியத்தை வெளிப்படுத்தின. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இரு நாடுகளுக்கிடையே போர்நிறுத்தத்தை அறிவிக்கிறேன்" என்று தனது ட்ரூத் சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து போர் நிறுத்தம் குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "இஸ்ரேல்தான் ஈரான் மீது தாக்குதலை நடத்தி போரைத் தொடங்கியது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இஸ்ரேல் ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத தாக்குதல்களை நிறுத்தினால், அதன் பிறகு இஸ்ரேல் மீதான எங்கள் பதிலடியைத் தொடரமாட்டோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
'இஸ்ரேல் தரப்பில் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடியை கொடுப்போம்' என்பதே ஈரானின் நிலைப்பாடாக இருந்து வந்தது.
இந்நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கும் இஸ்ரேல், "அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறோம். இதை மீறி ஈரான் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் கடுமையாக பதிலடி கொடுக்கும். பாதுகாப்புத் துறையில் அளித்த ஆதரவுக்கும், ஈரானிய அணுசக்தி அச்சுறுத்தலை ஒழிப்பதில் பங்கேற்றதற்கும் அதிபர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் நன்றி தெரிவித்துள்ளது."