Monsoon session: `ஆபரேஷன் சிந்தூர்; பொருளாதாரம்; நக்சலிசம்' - செய்தியாளர்களிடம் மோடி கூறியதென்ன?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது.
இந்தக் கூட்டத்தொடரில், 17 மசோதாக்களை மத்திய அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யவிருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பஹல்காம் தாக்குதல், கீழடி ஆய்வறிக்கை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பத் தயாராக இருக்கின்றன.

அ.தி.மு.க தரப்பிலிருந்து, தமிழக காவல்துறையின் லாக்கப் மரணங்கள், போதைப்பொருள் புழக்கம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பப்படவிருக்கின்றன.
இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய மோடி, "மழைக்காலம் புதிய உருவாக்கத்தின் சின்னம்.
விவசாயிகளின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் மழை மிக முக்கியமானது.
இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஒரு வெற்றி கொண்டாட்டம் போன்றது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் தருணம்.

ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் 100 சதவிகிதம் எட்டப்பட்டது.
தீவிரவாதிகளின் கூடாரங்கள் 22 நிமிடங்களுக்குள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் வலிமையை மொத்த உலகமும் கண்டது.
இப்போதெல்லாம், உலக மக்களை நான் சந்திக்கும் போதெல்லாம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீதான உலகத்தின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.
பொருளாதாரம்
பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், 2014-க்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் நாம் 10-வது இடத்தில் இருந்தோம்.
இன்று, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்.
அதேபோல், 2014-க்கு முன்பு நாட்டில் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.
இன்று, இந்த விகிதம் சுமார் இரண்டு சதவீதமாகக் குறைந்து வருவதால், அது நம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஒரு நிம்மதியாக மாறியுள்ளது.
25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது உலகின் பல நிறுவனங்களால் பாராட்டப்படுகிறது.

நக்சலிசம்
இன்று, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் நமது பாதுகாப்புப் படைகள் முன்னேறி வருகின்றன.
பல மாவட்டங்கள் இன்று நக்சலிசத்திலிருந்து விடுபட்டுள்ளன. 'சிவப்பு வழித்தடங்கள்' எல்லாம் 'பசுமை வளர்ச்சி மண்டலங்களாக' மாறி வருகின்றன.
இந்திய அரசியலமைப்பு நக்சலிசத்திற்கு எதிராக வெற்றி பெற்று வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்." என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.