சட்டவிரோத குடியேற்றத்தை ஒருபோதும் ஏற்க முடியாது - அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
Seeman: ``புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் தடை!’’ - சீமான்
கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கி அருந்தினார். நாதக'வின் உழவர் பாசறை சார்பில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்குப் பிறகு பேசியிருந்த சீமான், "'கள்' விஷம் என்கிறார்கள்; டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் Beer, Brandy, Whiskey எல்லாம் மிளகு ரசமா?" என்று பேசியிருந்தார்.
மேலும், தைப்பூசத்திற்கு முருகனுக்கு தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டும், ஆடு, மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடமில்லாமல் போய்விட்டது. அதற்கு ஒரு மாநாடு நடத்தப்போகிறேன் என்றும் பேசியிருந்தார்.

இதையடுத்து பாஜக அண்ணாமலை சீமானின் இந்த கள் இறக்கும் போராட்டம் குறித்து, "கள் இறக்கும் போராட்டத்திற்கு எங்களின் முழு ஆதரவு இருக்கிறது. தடையை உடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தடையை மீறச் செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. சட்டப்படி நின்று தடையை நீக்கப் போராட்டம் செய்வதே எங்களின் நோக்கம்" என்று கூறியிருந்தார்.
இதற்கிடயில் சீமானின் இந்த கள் இறக்கும் போராட்டம் சரியா? என விவாவதங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மீண்டும் கள் குறித்துப் பேசியிருக்கும் சீமான், "தமிழ்நாட்டில் கள் போதைப்பொருளானது எப்படி? புதுச்சேரியில் கள் விற்கப்படுகிறது; தமிழ்நாட்டில் மட்டும் அது போதைப்பொருளானது எப்படி?

தமிழர் வாழ்வியலோடு கலந்தது பனைமரம்; பரம்பரையாக பின்பற்றப்படும் தொழில் அது. நான் பனை மரம் ஏறியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தால், விசாரணையை எதிர்கொள்ளத் தயார்; சாராய ஆலையைத் திறந்தால் நியாயம், நாங்கள் பனை மரம் ஏறினால் குற்றமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.