Shreyas Iyer: `ஸ்ரேயஸை ஏன் தேர்வு செய்யவில்லை' - இந்திய டெஸ்ட் அணி தேர்வு குறித்து சேவாக் கேள்வி
இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் அடுத்த மாதம் (ஜூன்) 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது.
இதில், இந்திய புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழக வீரர் சாய் சுதர்சன், அர்ஷதீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோருக்கு முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

8 வருடங்களுக்குப் பிறகு கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியிருக்கின்றனர்.
அதேசமயம், பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு போட்டியில் களமிறக்காமல் பென்ச்சில் அமரவைக்கப்பட்ட சர்ஃபராஸ் கானுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், பார்டர் கவாஸ்கர் தொடரில் புறக்கணிக்கப்பட்ட புஜாரா இந்தத் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அந்த வரிசையில், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் காம்பேக் கொடுத்து நடக்குப்பு ஐ.பி.எல் தொடர் வரை கன்சிஸ்டன்சியாக சிறப்பாக ஆடிவரும் ஸ்ரேயஸ் ஐயருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது பல தரப்பிலிருந்தும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
அந்த வரிசையில், இந்திய முன்னாள் வீரர் சேவாக், "ஸ்ரேயஸ் தனது கேப்டன்சிக்கான போதுமான க்ரெடிட்ஸ் பெறவில்லை.
ரிஷப் பண்ட்டுக்கு சிறப்பான ஐபிஎல் சீசனாக இது அமையாததால் அவருக்கு கேப்டன்சிக்கு கிடைக்கவில்லை என்று மனோஜ் திவாரி கூறினார்.
ஆனால், ஸ்ரேயஸுக்கு இது நல்ல சீசன். கேப்டனாகவும் அவர் செயல்படுகிறார்.
அப்படியிருக்கும்போது அவர் ஏன் டெஸ்ட் போட்டியில் விளையாடக்கூடாது? நிச்சயமாக மூன்று ஃபார்மெட்டுகளிலும் அவரால் விளையாட முடியும்.

அவர் நல்ல ஃபார்மில் இருக்கும்போது அவரை இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு அழைத்துச் செல்வது நல்லது.
ஏனெனில் அவர் சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அவரை டெஸ்ட் அணியில் நான் பார்க்க விரும்புகிறேன்.
தற்போதைய அணுகுமுறையை அவர் பின்பற்றினால் அணிக்கும் அது பலனளிக்கும். இதுபோன்று இரண்டு மூன்று வீரர்கள் உங்களிடம் இருந்தால் அது எதிரணியில் அச்சத்தை ஏற்படுத்தும்.
இங்கிலாந்து அணி ஓவருக்கு 6, 7 ரன்கள் வீதம் ஆடுகிறது. அதேபோல், இந்திய அணி ஓவருக்கு 4, 5 ரன்கள் வீதம் ஆடினாலே அவர்களை அழுத்தத்துக்கு கொண்டுசெல்ல முடியும்" என்று Cricbuzz ஸ்போர்ட்ஸ் ஊடகத்திடம் கூறியிருக்கிறார்.