Varun Chakravarthy: "போனில் மிரட்டல்கள் வந்தன" - கரியரின் இருண்ட காலம் குறித்து மனம் திறந்த வருண்!
இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்புவாய்ந்த ஸ்பின் பௌலர் வருண் சக்கரவர்த்தி. கடந்த 2021ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியில் சரியாக செயல்படாததால் எதிர்கொண்ட மிரட்டல் அழைப்புகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மோசமான மனநிலை குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் வருண், தனக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததாகவும், விமான நிலையத்திலிருந்து பின் தொடரப்பட்டதாகவும், சிலர் தனது வீட்டைக் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார்.

வருண் ஐபிஎல் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி பெற்ற பெயரை உலகக் கோப்பையில் காப்பாற்றத் தவறினார். இந்தியா சூப்பர் 12 ஸ்டேஜிலேயே தொடரிலிருந்து வெளியேறியது.
வருண் அந்த தொடரில் ஒரு விக்கெட்கூட எடுக்கவில்லை. பேட்டியில், அப்போது அவர் மீது அதிகப்படியான அழுத்தம் இருந்ததாகக் கூறியுள்ளார். அதுதான் தனக்கு மிகவும் இருண்ட காலம் என்றும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
Varun Chakravarthy பேசியது...
கோபிநாத் உடனான சமீபத்திய பாட்காஸ்டில், "2021 உலகக்கோப்பை எனக்கு மிகவும் இருண்ட காலம். அப்போது நான் மன அழுத்தத்தில் வீழ்ந்தேன். இவ்வளவு ஹைப் கொடுத்து அணியில் சேர்த்தனர், ஆனால் ஒரு விக்கெட்கூட எடுக்க முடியாதது வருத்தமாக இருந்தது. அடுத்த 3 ஆண்டுகள் செலக்ஷனில் நான் இல்லை.

முதல்முறை இந்திய அணியில் இடம்பெற்றதை விட கம்பேக் கொடுப்பது கடினமானதாக இருந்தது. என்னைப் பற்றிய பல விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. தினசரி பயிற்சிகள், ரொட்டீன் எல்லாவற்றையும் மாற்றினேன். அதிகப்படியாக பயிற்சி செய்தேன். ஆனால் மீண்டும் அணியில் கூப்பிடுவார்களா என்றுகூட தெரியாமல் பயிற்சி செய்தேன்.
நல்லபடியாக ஐபிஎல் வெற்றிபெற்றோம். அதனால் மீண்டும் அணிக்குள் வந்தேன்." என்றார்.
மேலும் அவர் எதிர்கொண்ட மிரட்டல்கள் குறித்து, "2021 உலகக்கோப்பைக்குப் பிறகு மிரட்டல் அழைப்புகள் வந்தது. 'இந்தியா வந்திடாதே, உள்ள வரவிட மாட்டோம்' என மிரட்டினர். ஏர்போர்டில் இருந்து பைக்கில் இரண்டுபேர் வீடுவரை ஃபாலோ செய்தனர்...." எனக் கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய தூணாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி, 3 போட்டிகளில் மட்டுமே கலந்துகொண்டு 9 விக்கெட்கள் வீழ்த்தினார். வரும் மார்ட் 21ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2025ல் இவர் மீது பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.