அமெரிக்கா: ரூ.19 ஆயிரம் கோடி விமானம்; நிலத்தை ஊடுருவும் குண்டு - ஈரானை தாக்கிய ந...
Vijay: 15 நாள் அவர் கூட காம்பினேஷன் சீன் இருந்துச்சு; 'ஜன நாயகன்' பட அனுபவம் பகிரும் அருண்
'தளபதி 69'ல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க உடனடியா வினோத் சார் ஆபீஸ்க்கு வாங்க'னு போன் வந்தப்ப நம்மாளுங்க யாரோ ப்ராங்க் பண்ணுவாங்கனு நினைச்சுக்கிட்டேதான் போனேன். ஆனா நிஜமாகவே வினோத் சார் முன்னாடி போய் உட்கார்ந்த பிறகே அதை நம்பினேன். 'சின்ன வயசுல விஜய் சார் பட ஷூட்டிங் பாக்குற மாதிரி, அப்ப அவர்கிட்ட போய் கைகுலுக்குற மாதிரியான கனவெல்லாம் கண்டிருக்கேன். அது இப்ப நனவாகியிருக்கு' - 'ஜன நாயகன்' மூலம் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் சின்னத்திரை நடிகர் அருண்.

''வினோத் சார் கூப்பிட்டு என் கேரக்டர் பத்திச் சோல்லி, அது என்ன மாதிரி இருக்கணும், அதுக்கு என்னென்ன செய்யணும்னு கொஞ்ச நேரம் சொல்லிட்டு, 'உங்களுக்கு ஆடிஷன் தேவையில்லை'ங்கிற வார்த்தையையும் சொன்னார். அந்த நிமிஷத்தை என்னாலயே இன்னும் நம்ப முடியலை.
விஜய் சார் ஃபேன் நான். சினிமாவுல என் முதல் படம் அவர் படம், அவரோடு காம்பினேஷன் சீன் இருக்குங்கிறதையும் எப்படி நம்புவேன்? என் மனைவிக்கு போன் போட்டுச் சொல்றேன். அந்த பில்டிங்ல ஆடாத குறைதான். இதுக்கு மேல அந்த சந்தோஷத்தை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.
பிறகென்ன , மறுநாள்ல இருந்தே ஒரே ஒர்க் அவுட்தான். பார்த்தாலே ஒரு லுக் இருக்கணும்கிற மாதிரியான கேரக்டர்ங்கிறதால ஜிம், டயட்னு ஒரு ஷேப்புக்குள் வர வேண்டிய கட்டாயம்.
ஷூட்டிங் நாலு மாசம் போனேன். அதுல பதினைஞ்சு நாள் விஜய் சார் காம்பினேஷன் சீன் இருந்துச்சு.
வாழ்க்கையில சிலருக்கு சில மொமென்ட்ஸ் ஒரு தடவைதான் நடக்கும். எனக்கு இந்த வாய்ப்பும் இந்தப் படத்துல நடிச்ச அனுபவமும் அந்த ரகம்தான். திரும்பக் கிடைக்காது.

முதல் நாள் செட்ல விஜய் சார்கிட்ட அவருடைய காஸ்ட்யூம் டிசைனர் தான் என்னை அறிமுகப்படுத்தினார்.
'ஆல் தி பெஸ்ட் ப்ரோ'னு சொன்னார். அதோட அன்னைக்கு மீட் முடிஞ்சது.
தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் நடிக்கிறதை நான் பார்த்துட்டே வந்தேன். எல்லாமே சிங்கிள் டேக்தான். கேஷ்வலா, ஸ்டைலிஷா பண்ணிக்கிட்டே போயிட்டிருந்தார். ஒரு பெரிய ஆடியன்ஸ் மத்தியில் ஸ்டேஜ்ல அவர்பேசற சீன். மனுஷன் அசால்ட்டா பண்ணினார்.
என்னுடைய ரோல் வந்தப்ப நானுமே ஒன் மோர் டேக் வாங்காம நடிச்சேன். நானே எதிர்பார்க்காத அந்த தருணத்துல 'சூப்பரா பண்ணுனீங்க பிரதர்'னு சொல்லி எல்லார் முன்னாடியும் எனக்கு ரிஸ்ட் பஞ்ச் தந்து, உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு'னு வாழ்த்தினார்.
நான் அவர்கிட்டயே சொன்னேன், 'சார் என் அசிஸ்டன்ட் தம்பி பக்கத்துல இருக்கான். அவன் மட்டும் இங்க இல்லாட்டி நான் யார்கிட்ட இதைச் சொன்னாலும் நம்ப மாட்டாங்க'. நான் இன்னைக்கு தூங்க மாட்டேன் சார்'னு சொன்னேன்.

சந்தோஷத்துல மேற்கொண்டு என்ன பேசறதுன்னு எனக்கும் தெரியலை.
எல்லா விஜய் ரசிகர்களையும் போல நானும் பட ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன். இந்தக் கேரக்டரை வேற யாருக்கு வேணும்னாலும் கொடுத்திருக்கலாம். ஆனா என்னைத் தேடித் தந்த இயக்குநர் வினோத் சாருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த நேரத்துல தேங்க்ஸ் சொல்லவும் நான் மறக்க மாட்டேன்' என நெகிழ்கிறார் அருண்.