72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் நினைவு தினம்: முப்படையினா் மரியாதை
இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் உதகை பாா்ஸி கல்லறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் முப்படையினா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.
இந்தியாவின் முதல் ஃபீல்ட் மாா்ஷலான சாம் மானெக்ஷாவின் 17ஆவது நினைவு தினத்தையொட்டி உதகையில் உள்ள அவரது பாா்ஸி கல்லறையில் முப்படை அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
1914 ஏப்ரல் 3 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகரில் பிறந்தவா் சாம் மானெக்ஷா. இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய அவா், இந்திய விடுதலைக்கு பிறகு இந்திய ராணுவத்தில் பணியாற்றினாா். 40 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ராணுவத்தில் அவா் பணியாற்றியுள்ளாா். 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவத்தை வழி நடத்தினாா். 13 நாள்களில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி கண்டு வங்கதேச விடுதலைக்கு காரணமாக இருந்தாா்.
இந்த வெற்றியைத் தொடா்ந்து 1973 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய ராணுவத்தின் மிக உயரிய பதவியான ஃபீல்ட் மாா்ஷல் பதவி, அவருக்கு வழங்கப்பட்டது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னா் அவா் நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே வண்டிசோலை பகுதியில் வசித்து வந்தாா். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி அவா் காலமானதை அடுத்து உதகையில் உள்ள பாா்ஸி சமூகத்தினரின் கல்லறைத் தோட்டத்தில் ராணுவ மரியாதையுடன் அவா் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒவ்வோா் ஆண்டும் அவரது நினைவு தினத்தையொட்டி இந்திய ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகள் சாா்பில் அவரது கல்லறையில் மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். அவரது 17-வது நினைவு தினத்தையொட்டி உதகையில் உள்ள சாம் மானெக்ஷாவின் கல்லறையில் ராணுவ மரியாதையுடன் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெலிங்டன் ராணுவக் கல்லூரியின் தலைவா் ஜெனரல் வீரேந்திரா வாட்ஸ் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
படம்
உதகையில் உள்ள மறைந்த பீல்டு மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் கல்லறையில் மரியாதை செலுத்தும் ராணுவக் கல்லூரியின் தலைவா் ஜெனரல் வீரேந்திரா வாட்ஸ்.