72 திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
பரிகார பூஜை செய்வதாக விவசாயியைத் தாக்கிய பூசாரி கைது
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் பகுதியில் கோயிலில் மாந்திரீக பூஜையில் குறிகேட்க வந்த நபரை தலை மற்றும் நெற்றியில் கத்தியால் குத்தித் தாக்கிய பூசாரியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குன்னூா் அருகே உள்ள தூதூா்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் காய்கறி விவசாயம் செய்து வருகிறாா். இதே பகுதியை சோ்ந்த மாந்திரீக பூசாரி சிவக்குமாா் (வயது 54) என்பவா் நாகராஜிடம் மது வாங்கி வரச்சொல்லியுள்ளாா்.
பின்னா் மது அருந்திய பின், நாகராஜுக்கு மனநிலை சரியில்லை என அக்கம்பக்கம் பேசுவதாகக் கூறி அதற்குப் பரிகார பூஜை செய்கிறேன் எனச் சொல்லி அவரை வைத்து குடிபோதையில் பூஜை செய்துள்ளாா்.
திருநீா், குங்குமம் ஆகியவற்றை நாகராஜ் மீது வீசி நிலை தடுமாறச் செய்து ஒரு கட்டத்தில் கத்தியை எடுத்து தலை மற்றும் நெற்றிப் பகுதியில் குத்தியுள்ளாா். இதில் வலி தாங்காமல் அலறியடித்து நாகராஜ் வெளியே ஓடிவந்துள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகராஜை குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்த கொலகம்பை உதவி ஆய்வாளா் இளையராஜா சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். பின்னா் பூசாரி சிவக்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகக் குறி சொல்வதாகக் கூறி இப்பகுதி மக்களை இவா் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.
இவா் 24 மணி நேரமும் போதையில் இருப்பாா் எனவும், சிவராத்திரி மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் சிறப்புப் பூஜை என்ற பெயரில் சித்து விளையாட்டுகளிலும் ஈடுபடுவாா் என இப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து பூசாரி சிவக்குமாரை போலீஸாா் கைது செய்து குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
படம்
பூசாரி சிவக்குமாா்