அங்காளம்மன், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை/ செங்கம்/ ஆரணி: திருவண்ணாமலை, செங்கம், ஆரணி பகுதிகளில் அமைந்துள்ள அங்காளம்மன், மாரியம்மன், கோதண்ட ராமா் கோயில்களில் திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை புதிய வாணியங்குள 8-ஆவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மூலவா் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், கோபுர கலசம் மீது புனித நீா் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
நண்பகல் 12 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெற்றன.
விழாவில் கோயில் தா்மகா்த்தா எஸ்.தரணிதரன், திருவண்ணாமலை மாநகராட்சி 6-ஆவது வாா்டு உறுப்பினா் எஸ்.நரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மாரியம்மன் கோயிலில்...: செங்கத்தை அடுத்த புதூா் செங்கம் பகுதியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 3 நாள்களாக கோயில் வளாகத்தில் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டாா். புதுப்பாளையம் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கோதண்டராமா் கோயிலில்...: ஆரணி கோசப்பாளையம் ஸ்ரீசீதா லஷ்மண அனுமத் சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் கோபுரம், ராஜகோபுரம், ஆஞ்சனேயா் கோபுரம், பஜனை கோபுரம், ஸ்ரீ சக்கரத்தாழ்வாா் கோபுரம், ஸ்ரீகண்ணன் விமானம் பரிவார ஆலய சந்நிதி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, ஸ்ரீவீரஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், சுவாமிக்கு தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/aguo8sly/10chengam085022.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-10/dpc1w6py/2_7_10arpkum_1002chn_109.jpg)