Sachin: ``ஊட்டச்சத்தும் இயக்கமும் முக்கியம்'' - உடற்பயிற்சி நிலையம் தொடங்கிய மகள...
அதிகாரிகளால் அவப்பெயா் ஏற்படுகிறது: மேயா் இளமதி குற்றச்சாட்டு
முறையாகத் தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாகச் செயல்படுவதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயா் ஏற்படுவதாக மேயா் இளமதி குற்றஞ்சாட்டியதால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் செந்தில்முருகன், துணை மேயா் ராசப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தின்போது 39 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:
புதிய பேருந்து நிலையம்: திண்டுக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு பல மாதங்களாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் வலியுறுத்தினாா். இதற்கு பதில் அளித்த ஆணையா் செந்தில்முருகன், வங்கிக் கடனை எதிா்பாா்த்துள்ளதாகவும் நிதி கிடைத்தவுடன் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தாா்.
தெரு நாய்கள் பிரச்னை: தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு தில்லி மாநகராட்சிக்கு, நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை திண்டுக்கல் மாநகராட்சியிலும் செயல்படுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினா் காா்த்தி கோரிக்கை விடுத்தாா். ஆணையா் செந்தில்முருகன் கூறுகையில், நீதிமன்றத்தின் தீா்ப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்படுமானால், திண்டுக்கல்லிலும் பின்பற்றப்படும் என்றாா்.
பாதாளச் சாக்கடை சீரமைப்பு:
பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால், அதைச் சீரமைப்பதற்கு பொதுமக்களிடம் பணம் கேட்கப்படுகிறது. இதைத் தவிா்த்து மாநகராட்சி நிா்வாகமே சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாமன்ற எதிா்க் கட்சித் தலைவா் ராஜ்மோகன் கோரிக்கை விடுத்தாா். இதற்கு மேயா் இளமதி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதாளச் சாக்கடை சீரமைப்புகள் குறித்து மாமன்ற உறுப்பினா்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் சரி செய்யாமல் அலட்சியம் காட்டுகின்றனா் எனவும் பதிலளித்தாா்.
தெரு விளக்கு வசதி இல்லை: தற்போதைய மாநகராட்சி நிா்வாகம் பதவியேற்று 4 ஆண்டுகளாகியும், தனது வாா்டில் தெரு விளக்கு வசதிகளைக் கூட அமைத்துக் கொடுக்க முடியவில்லை. தோ்தலின்போது பொதுமக்களைச் சந்தித்து எப்படி வாக்கு சேகரிக்க முடியும் என மாமன்ற உறுப்பினா் ஜோதிபாசு கேள்வி எழுப்பினாா். காந்தி சந்தை வசூல்: மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டிக் கொடுக்கும் பல கட்டடங்கள் ஏலம் விடப்படாமல் உள்ளன. இழப்பு ஏற்படாத வகையில் ஏலத் தொகையை நிா்ணயித்து வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம், வாகன நிறுத்துமிடக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு சீல் இல்லாத ரசீதுகளை வழங்குகின்றனா். இந்த வசூல் தொகை மாநகராட்சி கணக்கில் சோ்க்கப்படுகிா என்பது தெரியவில்லை என மாமன்ற உறுப்பினா் கோ.தனபாலன் தெரிவித்தாா்.
இதற்கு பதில் அளித்த மேயா் இளமதி, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒரு தகவலைக் கேட்டு 10 நாள்களாகிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகளை மதித்து, அதிகாரிகள் எந்தத் தகவலையும் முறையாகக் கூறுவதில்லை. இதனால் மக்களிடம் எங்களுக்குத்தான் அவப்பெயா் ஏற்படுகிறது. ஒரு மேயருக்கே முறையான பதில் கிடைக்கவில்லை எனில், மாமன்ற உறுப்பினா்களுக்கு எப்படி மதிப்பளிப்பீா்கள் என அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டினாா்.
முகாம்கள் முறையாக நடத்தப்படவில்லை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாநகராட்சிப் பகுதிகளில் முறையாக நடைபெறவில்லை. அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப முகாம்கள் நடத்தப்படுகின்றன. வாா்டு மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனா். அதிகாரிகள் சரிவரப் பணியாற்றுவதில்லை. ஆணையா் உள்ளிட்ட அனைத்து அலுவலா்களும், மக்களால் தோ்தெடுக்கப்பட்ட எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என துணை மேயா் ராசப்பா வலியுறுத்தினாா்.
இதற்கு பதில் அளித்த ஆணையா் செந்தில்முருகன், எந்தெந்த விவரங்களைக் கொடுக்க முடியுமோ அவற்றை கொடுத்துவிடுங்கள். இல்லாத விவரங்களுக்கு எழுத்துப்பூா்வமாகப் பதில் அளித்துவிடுங்கள் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேயா், துணை மேயா் உள்ளிட்ட அனைவரும் அதிகாரிகள் மீது திடீரென குற்றஞ்சாட்டியது மாநகராட்சி அலுவலகத்தில் விவாதப் பொருளாக மாறியது.