அமெரிக்க துணை அதிபரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகை ரத்து!
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஜெய்ப்பூர் மாளிகை வருகையானது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஏப்.21 ஆம் தேதி இரவு ஜெய்ப்பூர் வந்தடைந்த அவர்கள் நேற்று (ஏப்.22) வரலாற்று சிறப்புமிக்க அமெர் கோட்டையைக்குச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று (ஏப்.23) அவர்களை நேரில் சந்தித்து வரவேற்றார். பின்னர், ஆக்ராவிலுள்ள உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹாலை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக துணை அதிபர் வேன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றிப்பார்த்தனர்.
இந்நிலையில், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகர மாளிகைக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களினால் அவர்களது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரையில் வழங்கப்படாத நிலையில் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலினால் இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தற்போது, ஜெய்ப்பூரின் ராம்பார்க் ஓட்டலில் தங்கியுள்ள துணை அதிபர் வேன்ஸின் குடும்பம் நாளை காலை 6.30 மணியளவில் அமெரிக்காவுக்கு திரும்பவுள்ளனர்.
முன்னதாக, துணை அதிபர் வேன்ஸின் வருகை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்று ஜெய்ப்பூர் மாளிகை மக்கள் பார்வைக்கு மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!